திருத்துறைப்பூண்டி, ஏப்.16: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்டக்குழு உறுப்பினர் கரிகாலன் மாணவர்களிடையே பேசுகையில். பாரம்பரிய நெல் ரகங்கள் அடுத்த தலைமுறைக்கு சென்றால் மட்டுமே நெல் ஜெயராமன் கனவு நிறைவேறும் என்றும், இன்று பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதற்கு ஒட்டு ரக அரிசியில் சாப்பிட்டதே காரணம் ஆகும். நமது பாரம்பரிய நெல் ரகங்களில் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாக இருப்பதாலும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மெதுவாக கலப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தப்படுகிறது என்றார்.நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் பேசுகையில், வேளாண் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களின் குணாதிசயம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட முன்வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றார். மேலும் இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினால் மட்டுமே அடுத்த தலைமுறையை நோயில்லாத சமுதாயமாக மாற்ற முயற்சிக்க முடியும் என்றார்.