திருச்சி, ஏப்.16: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 4ல் துவங்கி ஜூன் 14 வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களில் 195 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 257 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இத்தேர்வு நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கேள்வித்தாள் பண்டல்களை அவர்களிடம் ஒப்படைத்தார். செய்முறை தேர்வுகள் இன்று துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி ஒரு லேப்பில் 20க்கும் குறைவான மாணவர்களே ஒரு நேரத்தில் அனுமதிக்கப்படுவர். 24ம் தேதி செய்முறை தேர்வு மதிப்பெண்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.