திருப்பூர், ஏப்.16: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் ரோட்டில் வீசப்பட்டு வருவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. 20 மைக்ரான் அளவுக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கும், அதை வாங்கி பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையும், பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலித்தீன் பைகள், பேக்கரி, டீக்கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை ரோட்டோரம் வீசி சென்று விடுகிறார்கள்.
இதில், பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தடுக்கிறது. சமீபகாலமாக, மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் குப்பை அடைப்பு காரணமாக சாக்கடை கால்வாய்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவவும் வாய்ப்பாகிறது.