ஊட்டி,ஏப்.16: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் அனைத்தும் இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மட்டும் கல்லூரியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஊட்டி அருகே மிஷினரிஹில் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (59). இவர் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் ராஜாமணி நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி ஸ்டோர் ரூமில் ராஜாமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர் ஒருவர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஊட்டி பி1 காவல்துறையினர் ராஜாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறையினர் கூறுகையில், ராஜாமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்துள்ளார். தனிமையில் இருந்த போது யாரும் என்னை கவனிக்கவில்லை என அடிக்கடி கூறி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,
என்றனர்.