10 சதவீத லாபத்தை உறுதி செய்ய வேண்டும்

கோவை, ஏப்.16: கோவை ரேஸ்கோர்ஸில் மாநகராட்சி, அரசு ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் (சிசிசிஏ) 2021-2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றனர். சங்கம் துவங்கி 26 ஆண்டு எட்டிய நிலையில் தலைவராக உதயகுமார், செயலாளராக கேசிபி சந்திரபிரகாஷ், பொருளாளராக அம்மாசையப்பன் ,  துணை தலைவராக ராஜகோபால், துணை செயலாளராக மைக்கேல், துணை பொருளாளராக செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்களாக தாமஸ், சுந்தரம், செந்தில் பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் பதவியேற்றனர். கூட்டத்தில், சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் பேசுகையில்,`ஒப்பந்ததாரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. கடந்த 10 ஆண்டில் வலுவான மற்றும் வளமான ஒப்பந்த நிறுவனங்கள் உருவாகியிருக்கிறது. ஜி.எஸ்.டி அமலானதால் தொழில் துறையினர் திணறி வந்தனர். கோவை ஒப்பந்ததாரர்களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை வழங்கி, டி.டி.எஸ் கட்ட வைத்து 30 கோடி ரூபாய் வரையிலான இழப்பை தடுத்து இருக்கிறோம்.

மாநகராட்சியில் தாமதமான வேலைக்கு அபராதம் போடுகிறார்கள். முன்கூட்டியே முடிக்கும் பணிக்கு ஒரு சதவீதம் போனஸ் தராமல் இருந்து வந்தார்கள். இதற்கு வழக்கு போட்டு ஆர்டர் வாங்கப்பட்டது. ஒப்பந்தக்காரர்கள் பணி எடுத்துச் செய்யும் மதிப்பின் உச்சவரம்பு அளவை வைத்து அவர்களின் வகைப்பாட்டை (கிளாஸ்) நிர்ணயம் செய்ய வேண்டும். செட்டியூல் ஆப் ரேட்டில் 10 சதவீதம் ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் அரசிடம் வலியுறுத்தப்படும்,” என்றார்.

Related Stories: