மேட்டுப்பாளையம், ஏப். 16: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்தில் குட்டி யானை பள்ளத்தில் விழுந்து பலியானது. மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திகுட்டை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது இரண்டரை வயது பெண் யானை உயிரிழந்து கிடந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் சம்பவயிடம் சென்ற கால்நடை மருத்துவ அதிகாரி சுகுமார் யானையின் உடலை நேற்று மருத்துவ பரிசோதனை செய்தார். இதில் யானையின் உடம்பின் மேல் வெட்டு குத்து காயங்களோ குண்டடிபட்ட காயங்களோ இல்லை. வலது புறம் மார்பக விலா எலும்பு கூண்டின் மேற் பகுதி மற்றும் வலது பக்கவாட்டு வயிறு பகுதியில் உள் காயங்கள் அறிகுறிகளாக தோலுக்கு அடியில் மிகவும் சிவந்து காணப்பட்டது அதேபோல நுரையீரல் இருதயம் அதிகமாக சிவந்து காணப்பட்டது.