ஈரோடு, ஏப்.16: ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 104.6 மிமீ., மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. உச்சகட்டமாக 110 டிகிரி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பவானி, அந்தியூர், கோபி, தாளவாடி, ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு வரை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கோடை உழவு மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக இரவு முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.