குடியாத்தம், ஏப்.16: குடியாத்தம் அருகே வாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வாழை மரங்களை துவம்சம் செய்ததால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது, தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகம் குடியாத்தம் வனச்சரகம் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. அவ்வப்போது இங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமத்திற்கு நுழைய முயற்சிப்பது வழக்கம். அப்போது ஆந்திர யானைகளும் தமிழக யானைகளும் முட்டி மோதி பிளிறி சத்தமிடும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு 21 யானைகள் ஆந்திர வனச்சரக சரணாலயத்தில் இருந்து வெளியேறி குடியாத்தம் வனத்துக்குள் வந்து விட்டது. இங்கு தற்போது தமிழக யானைகளுடன் ஆந்திர யானைகள் முட்டி மோதி சண்டையிட்டு வருகிறது.