வாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி

குடியாத்தம், ஏப்.16: குடியாத்தம் அருகே வாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வாழை மரங்களை துவம்சம் செய்ததால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது, தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகம் குடியாத்தம் வனச்சரகம் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. அவ்வப்போது இங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமத்திற்கு நுழைய முயற்சிப்பது வழக்கம். அப்போது ஆந்திர யானைகளும் தமிழக யானைகளும் முட்டி மோதி பிளிறி சத்தமிடும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு 21 யானைகள் ஆந்திர வனச்சரக சரணாலயத்தில் இருந்து வெளியேறி குடியாத்தம் வனத்துக்குள் வந்து விட்டது. இங்கு தற்போது தமிழக யானைகளுடன் ஆந்திர யானைகள் முட்டி மோதி சண்டையிட்டு வருகிறது.

இதனை குடியாத்தம் வனத்துறையினர் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாலை 6 யானைகள் குடியாத்தம் அடுத்த ஆம்பூரான்பட்டி தனகொண்டபள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள வாழை மரங்கள் மிதித்து துவம்சம் செய்துள்ளது.அப்போது, ரோந்து பணியிலிருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். மேலும், எந்த நேரத்திலும் யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திட வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் கடும் பீதியில் உள்ளனர். குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமம் வாழைத்தோப்புக்குள் 6 காட்டு யானைகள் நுழைந்து வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது.

Related Stories: