வீடுகளில் நுழைந்து காஸ் சிலிண்டர்களை திருடி விற்றவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதிகளில் சமீப காலமாக வீடுகளில் வைக்கப்படும் காஸ் சிலிண்டர்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், வியாசர்பாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், பாண்டிச்சேரி தவளகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் (38) என்பதும், இவர் சாலிகிராமத்தில் அறை எடுத்து தங்கி, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளில் நுழைந்து காஸ் சிலிண்டர்களை திருடி வந்தது தெரியவந்தது. மேலும், அவ்வாறு திருடிய சிலிண்டர்களை அருகிலுள்ள கடைகளுக்கு கொண்டு சென்று, நான் வீடு காலி செய்து கொண்டு வெளியூர் செல்கிறேன். எனவே, இந்த சிலிண்டரை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள், என்று கூறி விற்று, அந்த பணத்தில்  உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும், சென்னையில் பல இடங்களில் இதுபோல் கைவரிசை காட்டியதும் தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 21 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: