போலீசாரால் தேடப்படும் ரவுடி மீது 27 வழக்குகள்

சேலம், ஏப்.16: சேலம் கிச்சிபாளையம் ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி மீது கொலை உள்பட 27 வழக்குகள் உள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரை, கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்பட 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 14பேர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக வட்ட செயலாளர் பழனிசாமி, அவரது சகோதரி கனகா, இளையராஜா, யுவராஜ் ஆகிய 4பேரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். மேலும் 10பேர் ஜாமீன் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த நாகர்கோவிலில் வசித்து வரும் சுதர்சன் என்ற சேட்டான் தலைமறைவாக உள்ளார். இவரை பிடிப்பதற்கு கிச்சிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேடப்படும் சுதர்சன் மீது 27 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. 4 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி வழக்கு பெண்களிடம் தகராறு செய்த வழக்குகள் என மொத்தம் 27வழக்குகள் உள்ளது. இவர் மீது திருவண்ணாமலை, வேலூர், பெங்களூரு ஆகிய இடங்களில் அதிகமாக வழக்கு உள்ளது.

Related Stories: