விவசாயியை தாக்கி டூவீலர் பணம் பறித்த 3 பேர் கும்பல்

கிருஷ்ணகிரி, ஏப்.16:பர்கூர் அருகே மார்க்கெட்டில் காய்கறிகளை விற்று விட்டு திரும்பிய விவசாயியை வழிமறித்து தாக்கி டூவீலர், பணம், செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அருகே ஜெகினிகொல்லை மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்(60), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை, தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை டூவீலரில் எடுத்து சென்று, கிருஷ்ணகிரி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பிஆர்ஜி மாதேப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி எதிரே வந்த போது, 20 முதல் 25 வயதுடைய வாலிபர்கள் 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் ரத்தினத்தை அவர் எதிர்பார்க்காத நேரத்தில், இரும்பு கம்பியால் தாக்கிய அந்த வாலிபர்கள் அவரிடமிருந்து டூவீலர், ₹6 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.  படுகாயமடைந்து சாலையில் கிடந்த ரத்தினத்தை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கந்திக்குப்பம் போலீசில் ரத்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: