கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

திருப்பூர், ஏப்.15: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி, கலைநிகழ்ச்சிகள் மூலம் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக நேற்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் அணைப்பாளையம் இந்திராநகர் குடிசை பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.

இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையிலும், சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களையும் வழங்கினார்கள். மாநகரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்  அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: