கோவை, ஏப்.15: கோவை போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). தனியார் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு சுந்தராபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் ரூ 20 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். ஜெயக்குமார் பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ராஜேந்திரன் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு ஜெயக்குமாரிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தன்று ஜெயக்குமாரை சுந்தராபுரம் காந்திஜி நகரில் ராஜேந்திரன் பார்த்துள்ளார். அப்போது அவர் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் பணத்தை கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ராஜேந்திரன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.