திருவண்ணாமலை, ஏப்.15: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நேற்று நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள், கிரிவலப்பாதையில் தீபமலையின் மேற்கு திசையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் வழிபடுவது வழக்கம். இக்கோயிலில் சித்திரை முதல் நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வு நிகழ்வு காலை 7 மணியளவில் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை, சித்திரை முதல் நாளன்று மட்டுமே நிகழும் சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசனம் செய்தனர். மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.