பூந்தமல்லி, ஏப்.15: கொரோனா பரவலை தடுக்க சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என திருவேற்காடு நகராட்சி கமிஷனர் வசந்தி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் 2வது அலை வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் வசந்தி அறிவுறுத்தலின்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர் திருவேற்காடு பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையொட்டி, நகராட்சி பகுதியில் வசிக்கும் 45வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 18 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதைதொடர்ந்து சிவன் கோவில் அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கொரோனாவல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்கள் வெளியே வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல இயலாத நிலை உள்ளது. இதற்காக வெளியே வர முடியாதமல் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் 10 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி அடங்கிய தொகுப்பு நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது. நோய் தொற்று தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள பொதுசுகாதார விதிமுறைகளை பொதுமக்கள், வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். எனவே நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் வசந்தி தெரிவித்தார்.