காஞ்சி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் கண்காணிப்பு அறையில் மழைநீர் புகுந்தது: கண்காணிப்பு பதிவுகள் பாதிக்கும் அபாயம்

காஞ்சிபுரம், ஏப்.15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள முகவர்கள் கண்காணிப்பு அறையில் மழைநீர் புகுந்துள்ளதால் கண்காணிப்புப் பதிவுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம். ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் திடீரென பெய்த மழையால் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அறையில் மழைநீர் புகுந்தது. இதனால் வீடியோ கண்காணிப்புப் பதிவுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே. தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: