அம்பேத்கரின் பிறந்த நாளில் சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

சென்னை: அரசியலமைப்பு சட்டத்துக்கு அணையா விளக்காக இருந்து வழிகாட்டி வரும் அம்பேத்கரின் 130ம் ஆண்டு பிறந்த நாளன்று அவரது நினைவை போற்றுவது நம் அனைவரின் கடமையாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடித்து கொடுத்து அரசியல் அமைப்பு சட்டத்துக்கு அணையா விளக்காகவும் இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கரின் 130ம் ஆண்டு பிறந்தநாளன்று அவரது நினைவை போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

சமூகம்- சட்டம்- கல்வி- பொருளாதாரம்- அரசியல்- வரலாறு- தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இத்துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் மட்டுமல்ல, இத்துறைகளின் திசைகளை திருப்பியவரும் அவரே. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை தந்து வருகிறது.

சட்டம் என்பதற்கும் மேலாக ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என பலராலும் அது போற்றப்பட அம்பேத்கரின் சமூக சிந்தனையே காரணம். அனைத்து மக்களுக்கும் சட்ட உரிமையை நிலைநாட்ட காரணமாக அது அமைந்துள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை சிதைக்க இன்றைய பாஜ அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்ட கட்டமைப்பை அசைக்க முடியவில்லை. ‘டாக்டர் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது’ என்று சொன்ன தந்தை பெரியார், ‘’எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்\\” என்று சொன்னார்.

அத்தகைய மாமேதையின் நினைவாக அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகம், மகளிர் கல்லூரி அமைத்தவர் கலைஞர். அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவியும், அம்பேத்கர் பெயரால் விருதும் வழங்கினார். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை சிறப்புற நடத்தினார். அம்பேத்கர், திராவிட இயக்கத்தின் வழிகாட்டியாகவே போற்றப்பட்டு வருகிறார். அரசியலில் கலந்து கொள்ளுங்கள். ஒரு சமூகத்தின் வலிமை அதன் விழிப்புணர்வு, கல்வி, சுயமரியாதை ஆகியவற்றில்தான் இருக்கிறது” என்றார் அவர். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் பாடுபட்டார். ‘விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்\\” என்றார் அவர். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, பகுதி செயலாளர் மு.ராசா, வட்ட செயலாளர் சின்மயாநகர் லோகு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர். அவரின் வழியில் அப்பணியை திமுக சார்பில் சிறப்பாக செய்வோம்’ என தெரிவித்தார்.

Related Stories: