சித்திரை பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு தங்கக்கவசத்தில் அருள்பாலித்த ராஜகணபதி

சேலம், ஏப்.15: சித்திரை பிறப்பையொட்டி சேலம் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பு, தமிழ் புத்தாண்டு அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். அன்றையதினம் கோயில்களில் மூலவர்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார,  ஆராதனைகள் நடக்கும். அதன்படி, சேலம் தேர்நிலையம் ராஜகணபதி கோயில் விநாயருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இங்கு விநாயகர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், காசிவிஸ்வநாதர் கோயிலில் காசி விஸ்வநாதருக்கு விஷூ கனி அலங்காரம் நடைபெற்றது. குமாரசாமிப்பட்டி எல்லைபிடாரியம்மன் கோயில் அம்மன் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள், கோட்டை மாரியம்மன், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், பெருமாள், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. இங்கு பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் விபூதி, குங்குமம் வழங்குவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த விபூதி, குங்குமத்தை பக்தர்கள் தாங்களாக எடுத்துக்கொண்டு, வழிபட்டுச் சென்றனர்.

Related Stories: