சேலத்தில் 175 பேருக்கு கொரோனா முதியவர் உள்பட இருவர் பலி

சேலம், ஏப். 15:சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 33,352 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். நேற்று 95 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர், கடந்த 10ம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதேபோல், 63 வயதான முதியவர், கடந்த 9ம் தேதி உடல்நல குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.  இதனால், சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: