பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி

தர்மபுரி, ஏப்.15: தர்மபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், தீ விபத்தில் அணைக்கும் போது உயிர்நீத்த வீரர்களுக்கு, தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தீத்தொண்டு வாரம் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராஜா (தர்மபுரி), செல்வமணி (பாப்பிரெட்டிப்பட்டி), பழனிசாமி (அரூர்), (பென்னாகரம்), மணிகண்டன் (ஒகேனக்கல்), செல்வம் (பாலக்கோடு) மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலைய அதிகாரி கூறுகையில், ‘தமிழகத்தில் 1955ம் ஆண்டு முதல் இதுவரை 33 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். தீயணைக்கும்போது உயிர் துறந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தீயணைப்பு தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீத்தொண்டு வாரம் நடக்கிறது. இதில் தீ விபத்தில் ஏற்படும் பொருளாதார அழிவினை தடுக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படும்,’ என்றார்.

Related Stories: