வேலூர், ஏப்.14: பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால், முகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் மாற்று இடத்தில் விற்பனையில் ஈடுபட்டதால் ெகாரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்டவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட், மாங்காய் மண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 3 உழவர் சந்தைகள், அருகில் உள்ள பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் இயங்கி வருகிறது. மேலும், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வாரச் சந்தைகளையும் மூட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த மாட்டுச்சந்தை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் பிரபலமானதாகும். அங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பகுதி முழுவதும் மாடுகள் நிறைந்து காணப்படும்.