குடியாத்தம், ஏப்.14: குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்தில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம் செய்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்நிலையில் ஆந்திர வனச்சரகத்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி கூட்டம் கூட்டமாக குடியாத்தம் அருகே உள்ள தமிழக வனப்பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் தமிழக யானைகளும், ஆந்திர யானைகளும் வனப்பகுதியில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் ஆந்திர வனப்பகுதியில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு 21 யானைகள் வெளியேறி குடியாத்தம் வனப்பகுதிக்குள் வந்தது. இதை கவனித்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை விரட்டி அடித்தனர்.