தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி, ஏப் 14: தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் ேகாடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மார்ச் மாதம் இறுதி வாரம் துவங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஊட்டியை முற்றுகையிடுவார்கள். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டும். அதுமட்டுமின்றி, அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும். இதன் மூலம் ஊட்டியில் உள்ள வியாபாரிகளுக்கு கூடுதலான வருவாய் கிடைக்கும். மாவட்டத்தின் பொருளாதாரமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயரும். வழக்கம் போல், இம்முறையும் சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டும் நிலையில், மார்ச் மாதம் இறுதி வாரம் முதலே சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் கொேரானா பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று தெலுங்கு வருட பிறப்பு மற்றும் இன்று தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் கிடைத்த நிலையில் நேற்று முன் தினம் முதலே சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, நேற்று பிற்பகலுக்கு மேல் சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்துவங்கினர். நேற்று அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. எனினும், கொரோனா பாதிப்பு காரணமாக தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.ேமலும், புல் மைதானங்களுக்குள் செல்வதற்கும், அமருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவிற்கு வந்த வேகத்தில் சுற்றுலா பயணிகள் வெளியில் சென்றனர். அதேசமயம், தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் இல்லாததால் வெகு நேரம் சுற்றி பார்த்தனர்.

Related Stories: