வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளிப்பதை தடுக்க வலியுறுத்தல்

ஊட்டி, ஏப். 14: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மான், மயில் போன்றவற்றிற்கு உணவளிக்கின்றனர். இதனால் அவை விபத்தில் சிக்கி உயிரிழக்க கூடிய அபாயம் நீடிக்கிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கு புலி, சிறுத்தை, யானை, பல்வேறு வகை மான்கள், மயில் உள்ளிட்ட பறவைகள் உள்ளன. புலிகள் காப்பகத்தின் நடுவே மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு சாலை உள்ளது. இச்சாலை வழியாக கர்நாடகா, கேரளாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். சாலையோரங்களில் புள்ளி மான்கள், யானைகள், மயில், குரங்குகள் போன்றவைகள் உலா வருவதை காண முடியும். இந்த சூழலில் சாலையோரம் நிற்கும் மான்கள், மயில் போன்றவற்றிற்கு சுற்றுலா பயணிகள் உணவளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் உணவை எதிர்பார்த்து வன விலங்குகள் சாலைகளில் ஓடும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே முதுமலையில் ரோந்து பணி மேற்கொள்ளும் வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: