×

சேலம் மின்வாரிய ஊழியர் கொலையில் 2 பேர் கைது

மேட்டூர், ஏப். 14: மேச்சேரி அருகே சேலம் மின்வாரிய ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகளின் சகோதரர்கள் 2 பேரை, தனிப்படை  போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி நல்லியண்ணன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (54).  இவரது மனைவி பானுமதி (46). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தன், சேலம் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
அவரது மூத்த மகன் செல்வகுமார், தமிழ்நிதி என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம்  முதலே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சௌந்தர்யா செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை,  பானுமதி கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த சௌந்தர்யா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்குவந்த சௌந்தர்யாவின் தந்தை தமிழ் நிதி, தாய் சித்ரா, சகோதரர்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோர்,  மண்வெட்டி வீச்சு அரிவாள் மற்றும் இரும்பு கம்பியுடன் வந்து, கோவிந்தன் மற்றும் பானுமதியை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். கோவிந்தன் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 9ம்தேதி சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, கோவிந்தனின் உறவினர்கள் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சடலம் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைத்து, நேற்று தலைமறைவாக இருந்த தமிழ்நிதியின் மகன்கள் பிரசாந்த், கோகுல் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags : Salem ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை