கெங்கவல்லி, ஏப்.14: சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை நடுவீதியை சேர்ந்த நல்லமுத்து மகன் ராஜா(26). இவர் ஆத்தூர் கேஸ் கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரும், ஆணைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் சௌமியா(23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், 8ம் தேதி திட்டக்குடியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு நேற்று சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கரிடம் தஞ்சமடைந்தனர். அவரது பரிந்துரையின்பேரில் ஆத்தூர் டவுன் எஸ்ஐ மூர்த்தி, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சௌமியாவின் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, ராஜாவுடன் சௌமியாவை அனுப்பி வைத்தனர். இவர் தலைவாசலில் தனியார் கல்லூரியில் எம்ஏ ஆங்கிலம் படித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.