நொச்சிப்பட்டி பஞ். பகுதியில் கொரோனா விழிப்புணர்வு

ஊத்தங்கரை, ஏப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி பஞ்சாயத்தில் கல்லூர், ஊனாம் பாளையம், சின்ன பொம்பட்டி, கணக்கம்பட்டி, பெரிய பொம்பட்டி, நொச்சிப்பட்டி, என் வெள்ளாளப்பட்டி, வைத்தியானூர் உள்ளிட்ட கிராம பகுதியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதை தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இல்லை என்றால் ₹200 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளவர்கள் அருகே உள்ள சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: