தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு

தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 1600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பங்கி பூ சாகுபடி செய்துள்ளனர். சம்பங்கி விதை கிழங்கு சாகுபடி செய்து ஆறு மாதத்தில் பூ எடுக்க ஆரம்பிக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமா வருமானம் அதிகரிக்கும். பூச்சி, நோய் தாக்காமல், வரும் முழுவதும் வருமானம் தருவதாக சம்பங்கி பூ உள்ளது. தற்போது பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக சாகுபடி உள்ளது. ஏக்கருக்கு சுமார் 4 முதல் 6 டன் பூ மகசூல் கிடைக்கும். ஆண்டு முழுவதும் சீரானவிலையில் சம்பங்கி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒருகிலோ ₹100 முதல் ₹120 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சம்பங்கி விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தைக்கு பூ வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 300 கிலோ சம்பங்கி விதை தேவைப்படும். எல்லா வகை மண்ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண்ணில் வளரக் கூடியது. தொழு உரம் ஏக்கருக்கு 20 டிப்பர் இட்டால் போதும். மேல் உரமாக இயற்கை வழி உரமான தழை, மணி சத்துக்கள் கொண்ட உர வகைகளை இடவேண்டும். நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும், நல்ல வடிகால் வசதி உள்ள வாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக சம்பங்கி ஒரு கிழங்கு வகை பயிராக இருப்பதால், மழைக் காலங்களில் கிழங்கு அழுகல் வரும். விவசாயிகள் உஷாராக பார்த்துக்கொள்ள வேண்டும். நட்ட 3 மாதங்களில் ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங் கொன்றும் பூ வரும். 9 மாதத்தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூ மகசூல் கிடைக்கும்.இவ்வாறு கூறினர்.

Related Stories: