மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது

ஆவடி, ஏப்.14: மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி டேங்க் பேட்டரி பகுதியை சேர்ந்தவர் டேனியல் (33). மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். புகாரில், எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், செம்மஞ்சேரியை சேர்ந்த ராஜசேகர் (39), அவரது மனைவி சதா (எ) பீலா ஜோஸ்லி (33) ஆகியோருடன் பழக்கம் கிடைத்தது. இதைதொடர்ந்து அவர்கள், தங்களுக்கு மின் வாரியத்தில் உயர் அதிகாரிகள் பலர் தெரியும்.

இதனால் எனக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருகிறோம் என உறுதியளித்தனர். அதற்கு, பணம் கொடுக்க வேண்டும் என கூறினர். அவர்கள் கேட்டபடி நான், ரூ.7 லட்சத்தை இருவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் சொன்னப்படி எனக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால், நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். இதையடுத்து நான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும், என்னை கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தம்பதியிடம் இருந்து ரூ.7 லட்சத்தை  பெற்று வர வேண்டும் என கூறியிருந்தார். புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், ராஜசேகரும், சதாவும் கணவன் மனைவி போல் சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ராஜசேகர் மீது கொலை உள்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இருவரும் டேனியல் உள்பட பட்டதாரி வாலிபர்கள் பலரிடம், தங்களுக்கு அரசு அதிகாரிகள் பலர் தெரியும் என கூறி தொடர் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகர் மற்றும் சதாவை கைது செய்தனர்.

Related Stories: