மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிவு

ஊட்டி,ஏப்.13: ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மார்லிமந்து, டைகர்ஹில், கோாிசோலை, கீழ்கோடப்பமந்து, மேல் கோடப்பமந்து உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகின்றன. இந்த அணைகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியின் 3,4வது வார்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது இந்த அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

அதன்பின் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மார்லிமந்து அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அணையில் நீர்மட்டம் ெவகுவாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 8 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது. ஓரிரு நாட்கள்  கோடை மழை பெய்யும் பட்சத்தில் அணையில் நீர்மட்டம் ஒரளவிற்கு உயரும். தவறும் பட்சத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: