கோவையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையம்

கோவை, ஏப். 13: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் இடத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையத்தை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் 150 முதல் 200 பேருக்கு என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த சூழலில், தெருத்தெருவாக சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நடமாடும் தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு 3 குழுக்கள் செயல்பட உள்ளன. இந்த குழுக்கள் தொழிற்சாலை பணியாளர்கள், வணிக வளாக மற்றும் கடை பணியாளர்கள், பள்ளி பணியாளர்கள், குடியிருப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொது இடத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். வணிக நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது. மாநகராட்சியில் உள்ள சந்தைகளிலும் 50 சதவீதம்தான் இயங்க வேண்டும். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது. கோவையில் 20 லட்சம் மக்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை அதிகமாகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அழைத்தால் அங்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவையில் 1500 பெட்கள் தயார் நிலையில் உள்ளன. இதனை 3 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தனிப்பட்ட நபர் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. மாஸ்க் அணியாமல் வருபவர்களை பேருந்து அல்லது கடைக்குள் அனுமதிக்கும் நிறுவனத்திற்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பூங்காக்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் 50 சதவீத மக்கள் நுழைவதை உறுதி செய்வோம். கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் 100 சதவீதம் தடை விதிக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு குமாரவேல் பாண்டியன் கூறினார்.

Related Stories: