அரசு ஊழியர்கள் வரும் 30ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும்

வேலூர், ஏப்.13: வேலூர் மாவட்டத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களில் 5.36 லட்சம் பேரில் 1.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வரும் 30ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும். சமூக இடைவெளி இல்லாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: கொரோனா 2வது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு. எனவே 80 சதவீதம் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போது 60 ஆயிரம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. இது ஒரு சில நாட்களில் தீர்ந்துவிடும். எனவே இருப்பு வைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மற்ற துறையை சேர்ந்த அதிகாரிகள் தடுப்பூசி முகாம் நடத்தும் போது சுகாதாரத்துறையின் ஆலோசனையின்றி நடத்தக்கூடாது.  ஏப்ரல் 30ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தபால், பிஎஸ்என்எல், எல்ஐசி, ரேஷன், சிவில் சப்ளை குடோன் ஆகியவற்றில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் ெகாரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. பொய்கை மாட்டுச்சந்தை மூடவேண்டும். வாரசந்ைதகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக உழவர் சந்தைகளை திறக்கும்ேபாதும், மூடிய பின்னரும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் பாரபட்சமின்றி சீல் வைத்துவிடுங்கள். ஒரு முகாமில் குறைந்தபட்சம் 200 பேருக்காவது தடுப்பூசி போட வேண்டும்.

அனைத்து வகை கடைகள், வணிக நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 26ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் மேலும் ‘இங்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். இதனை அதிகாரிகள் ரேண்டம் முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.

தடுப்பூசி போடாமல் யாரேனும் இருந்தால் உடனடியாக பூட்டி சீல் வைக்கலாம். அவர்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கடை திறக்க அனுமதிக்க வேண்டும். இது மருந்துகடைகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

அரசு சார்பில் நடத்தப்படும் முகாம்களில் பொதுமக்களும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வசதியாக இரவு நேரத்தில் 9 மணி முதல் 11 மணி வரை தடுப்பூசி முகாம் நடத்தவேண்டும். அவர்கள் பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது தடுப்பூசி போட வேண்டும். மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தம் 5.36லட்சம் பேரில் 1.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில் எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்தீபன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஆர்டிஓ கணேஷ், டீன் ல்வி, கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஓட்டுனர் உரிமம் வழங்குவதை நிறுத்தவும் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம் நடத்தி, அனைவருக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பின்னர் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தொடராலம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார். வேனில் காய்கறி விற்பனைக்கு அனுமதி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டு, தற்காலிக இடத்திற்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது மினி வேனில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல, தற்போதும் மினி வேனில் காய்கறிகள் விற்பனை செய்யலாம் என்று கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியலை வைத்து கணக்கெடுப்பு

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா? என்ற விவரங்களை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வார்டு வாரியாக சென்று அதிகாரிகள் கணக்கெடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.  தினமும் தடுப்பூசி அப்டேட் செய்ய வேண்டும் கூட்டத்தில் டிஆர்ஓ பார்த்தீபன் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும் தினமும் மாலை 6 மணிக்கு, உங்கள் துறையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எத்தனை பேருக்கு இன்று (நேற்று) தடுப்பூசி போடப்பட்டது. இன்னும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற விவரத்தினை தெரிவிக்க வேண்டும், என்றார். 

Related Stories: