கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று

கரூர், ஏப். 13: கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையான அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. படிப்படியாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்தாண்டு கரூர் மாவட்டத்தில் தினமும் 30க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். முற்றிலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில், மக்கள் கொரோனாவை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியது. கடந்த நான்கு நாட்களாக 9 பேர், 15 பேர், 16, 18 என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அ திகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: