×

கூலித்தொழிலாளி அடித்துக்கொலை: சிறுவன் உள்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(40). கூலித்தொழிலாளி. கடந்த 8ம் தேதி கொத்தவால்சாவடி கந்தப்ப செட்டி தெருவில் குடிபோதையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். கொத்தவால்சாவடி போலீசார் அவரது சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையில் கண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 பேர் சேர்ந்து கண்ணனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பிராட்வே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(21), அப்பு(20), அப்புவின் தம்பியான 16 வயது சிறுவன் மற்றும் பன்னீர்செல்வம்(34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 7ம் தேதி இரவு கூலித்தொழிலாளி கண்ணனும் அவரது நண்பரும் சேர்ந்து அப்புவின் தம்பியான 16 வயது சிறுவனை பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து 16 வயது சிறுவன் தனது அண்ணன் அப்புவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பு, ராஜ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் சிறுவன் ஆகியோர் சேர்ந்து குடிபோதையில் இருந்த கூலித்தொழிலாளி கண்ணனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்திலும், அப்பு உள்ளிட்ட 3 பேரும் சைதாப்பேட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...