×

கொங்கணாபுரம் அருகே விபத்தில் சிக்கி இறந்தார் போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்த முதியவர் சடலம் தோண்டி எடுப்பு

இடைப்பாடி, ஏப்.13: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அடுத்த அழகப்பன் பாளையம்புதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி நாராயணன்(68). இவர் கடந்த 5ம்தேதி, சீலநாயக்கன்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு,  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர்  வீடு திரும்பிய நாராயணன், கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். உறவினர்கள் மூலம், நாராயணனின் சடலத்தை, அவரது தோட்டத்திலேயே புதைத்துவிட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த நாராயணன் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை தோண்டி எடுத்து, மறுபிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
நேற்று இடைப்பாடி தாசில்தார் முத்துராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்  ஆகியோர் முன்னிலையில், சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் கோகுலரமணன் மற்றும் குழுவினர், தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நாராயணனின்  சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்து, பின்னர் அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இறந்து போன நாராயணனுக்கு, பச்சையம்மாள் என்ற மனைவியும், குப்புசாமி, முருகன் என்ற மகன்களும்
உள்ளனர்.

Tags : Konganapuram ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது