கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கம், பாரம்பரிய பம்பை கை சிலம்பாட்டக் கலைஞர்கள் சங்கம், சிவசக்தி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கம், காமதேனு கிராமிய கலைக்குழு சங்கம், தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம், நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கிராமியக் கலைஞர்கள் 3 லட்சம் குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கலைநிகழ்ச்சிகள் 90 சதவீதத்திற்கு மேல் நடைபெறுவது கோவில் திருவிழாக்களில்தான். தற்சமயம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில், கோயில் திருவிழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், சிறிய மற்றும் கிராமக் கோயில்களில் மட்டுமாவது திருவிழாக்கள் நடத்தவும், சமூக இடைவெளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், ஊரடங்கு தடை காலத்தில், கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ₹10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.