சின்னசேலம் அருகே பரபரப்பு மின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு

சின்னசேலம், ஏப். 13: சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. இவர் லட்சியம் கிராம எல்லையில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிற்கு மின்இணைப்பு வேண்டி கடந்த வருடம் கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கான பணத்தையும் கட்டி உள்ளார். இந்நிலையில் அவருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய துறையினர் நேற்று மின்தட விஸ்தரிப்பு பணியை மேற்கொள்ளும்போது எரவார் வடக்கு காட்டுகொட்டாயை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனக்கு பாதிப்பு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மின்பொறியாளர் பாண்டுரங்கன் பாதுகாப்பு கேட்டு சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், தனிப்பிரிவு ஏட்டு ஏழுமலை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவருக்கு பாதிப்பில்லாத வகையில் இளமின்பொறியாளர் பாண்டுரங்கன் தலைமையில் மின்வாரிய துறையினர் மின்தடம் அமைத்து பச்சமுத்துவுக்கு மின்இணைப்பு கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: