உளுந்தூர்பேட்டை, ஏப்.13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியில் துணிப்பை ஒன்று கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அந்த குப்பை தொட்டியில் கிடந்த துணிப்பையில் ரத்தக்கறையுடன் பிறந்த சில நிமிடங்களே ஆன தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் ஆண் குழந்தை சடலம் இருந்தது. இதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.