மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்: கட்டிடத்தொழிலாளி அடித்து கொல்ல முயற்சி: நண்பன் கைது

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி வன்னியர் தெருவை சேர்ந்தவர் மாதவன் (45). கட்டிடத்தொழிலாளி. மாதவனின் அக்கா ரமா இதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாதவனுக்கு ரமா சாப்பாடு கொண்டு வந்துள்ளார். அப்போது அவர் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்களுடன் வீட்டில் மயங்கிக் கிடந்தார். அதிர்ச்சியடைந்த ரமா, கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்க்கு விரைந்து வந்தனர். மாதவனை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் மாதவனின் நெருங்கிய நண்பர் மதன்குமார் (30), தனியார் நிறுவன ஊழியர். இருவரும் நேற்று முன்தினம் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில்  மதுஅருந்துவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மாதவனிடம் மதுவாங்க மதன்குமார், பணம் கேட்டுள்ளார். அப்போது மாதவன், பணம்தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், குக்கர் மூடியை எடுத்து மாதவனின் தலையில் சரமாரியாக அடித்துவிட்டு தப்பிவிட்டார். இதில் மாதவனின் மண்டை உடைந்து மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதன்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: