கண்ணமங்கலத்தில் சொந்த செலவில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த சிவனடியார் பொதுமக்கள் பாராட்டு

கண்ணமங்கலம், ஏப்.12:கண்ணமங்கலத்தில் சொந்த செலவில் குண்டும் குழியுமான சாலை முகப்பை சரிசெய்த சிவனடியாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கண்ணமங்கலம் பேரூராட்சி அமைந்துள்ளது. இதில் வேலூரிலிருந்து செல்லும் போது அமைந்துள்ள செம்படவர் தெரு கண்ணமங்கலத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. நகர மக்கள் இந்த வழியாகத்தான் ஊருக்குள் செல்ல வேண்டும். நாகநதி ஆற்றங்கரையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கும், பிரசித்தி பெற்ற 64 அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ள ராமநாத ஈஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் திருவண்ணாமலை சாலை சீரமைப்பின் போது சாலை உயரமாக்கப்பட்டதால் இந்த தெரு பள்ளத்தில் சென்றதோடு, குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இதனை பார்த்த கண்ணமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகரான சிவனடியார் பாண்டியன் தன் சொந்த செலவில் இந்த இடத்தை சீரமைத்து சிமென்ட் சாலை போட்டார். இதனை தொடர்ந்து இப்போது வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

அனைத்திற்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்து கொண்டிருக்காமல் தங்களால் முடிந்த சமூக பணிகளை அனைவரும் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்த பொதுமக்கள் சிவனடியார் பாண்டியனுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Related Stories: