×

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா

திருப்பூர்,ஏப்.12:  திருப்பூர் மங்கலம் ரோடு கிரி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த கொரோனா தொற்றிற்கு பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தொழில் நகரமான திருப்பூரில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மங்கலம் ரோடு கிரி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியை தடுப்புகள் கொண்டு மாநகராட்சியினர் அடைத்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறையின் சார்பில் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ