×

பெரியமாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்

ஈரோடு, ஏப்.12:  ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று (12ம் தேதி) நடைபெறும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 7ம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். கடந்த 8ம் தேதி காலை காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழாவும், சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் எளிமையாக நடந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகமானதையொட்டி திருவிழா நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால், கம்பங்களுக்கு புனித நீர் ஊற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அம்மனை மட்டும் பக்தர்கள் வழிபட்டு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயிலின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பக்தர்களுக்கு தடை:
பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் மதியம் 3 மணியளவில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, கம்பங்களை பூசாரிகள் தோளில் சுமந்து முக்கிய வீதி வழியாக வந்து மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் சேர்ந்து, மாநகரில் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காரைவாய்க்காலில் விடப்படும். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால், நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மதியம் 3 மணிக்கு நடைபெறும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, இன்று (12ம் தேதி) அதிகாலை 5.05 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் இருந்து எடுக்கப்படும் கம்பங்கள் தனித்தனி சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து ஒரு லாரியில் 3 கம்பங்களுக்கும் ஏற்றப்பட்டு ஆர்.கே.வி.ரோடு, காவிரிரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதில், பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இத்தகவலை பெரியமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.

Tags : Periyamariamman Temple ,
× RELATED ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.21.35 லட்சம் காணிக்கை