மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை

ஈரோடு, ஏப்.12: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கும், கடைகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இறைச்சி கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 2ம் அலை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஈரோடு மாநகரில் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட், காவேரி ரோடு மீன் மார்க்கெட், நகர் பகுதியில் இயங்கும் இதர மீன் கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்தது.  இதேபோல், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மீன் கடைகள் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், கோழி, ஆடு இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை முதலே பார்சல் மூலம் விற்பனை நடைபெற்றது.

இந்த கடைகளில் விற்பனையாளர்கள் முக கவசம், கையுறை அணிந்து விற்பனை செய்கிறார்களா?, வாடிக்கையாளர்கள் சமூக விலகலையும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா? என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதில், முக கவசம் அணியாமல் இறைச்சி கடைகளுக்கு வந்ததாக 20க்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

Related Stories: