சேலம், ஏப். 12:சேலம் கருப்பூர் அடுத்த மூங்கப்பாடி ஊராட்சி டால்மியாபுரம் பர்ன் அன்கோ பின்புறம் எலும்பு கூடு ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கருப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.எலும்புக் கூடு அருகே வெள்ளை, நீல நிறத்தில் பிரவுன் நிற பூப்போட்ட சேலை, கருநீல நிற பாவாடை, பச்சை நிற ஜாக்கெட் கிடந்தன. சடலத்தின் பெரும்பகுதி அழுகி விட்டது. சடலம் எலும்பு கூடாக காட்சியளிப்பதால், இறந்தவரை அடையாளம் காணமுடியவில்லை. சேலை, ஜாக்கெட் கிடந்ததால், எலும்பு கூடாக கிடப்பது பெண்ணாக இருக்கும் எனவும், இறந்து 2 மாதத்திற்கு மேல் ஆகி இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். எலும்புக் கூட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனைக்கு பிறகே, இறந்தவர் யார்? கொலை செய்யப்படாரா? தற்கொலையா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.