சேந்தமங்கலம் அருகே கொள்ளை முயற்சி நடந்த முருகன் கோயிலில் மர்ம நபர்கள் நடமாட்டம்

சேந்தமங்கலம், ஏப்.12: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரம் அருகே, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழனியப்பர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.  தற்போது இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு படுத்திருந்த ஆடுகளை கொன்று விட்டு கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தனர். அலாரம் அடித்ததால் அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இரவு நேரத்தில் கோயில் வளாகம் பகுதியில், மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு 10 மணிக்கு மேல் அங்கு கும்பலாக சேர்ந்து மது அருந்தி வருகின்றனர். கோயிலில் உள்ள பூசாரியை மிரட்டி வீட்டுக்குப் போகும்படி கூறுகின்றனர். நள்ளிரவுக்கு மேல் வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் வந்து செல்கின்றன. எனவே, போலீசார் இரவு நேரத்தில் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.மேலும், இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கோயிலுக்கு பாதுகாவலரை நியமிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: