பென்னாகரம், ஏப்.11: பென்னாகரம் அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை கொண்டு இரண்டு புள்ளி மான்களை வேட்டையாடிய 3பேரை வனத்துறையினர் கைது செய்து, 2நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பென்னாகரம் அருகே, முதுகம்பட்டி பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக, பென்னாகரம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மசக்கல் காப்புக்காடு பேகியம் மாரியம்மன் கோயில் அருகே, வனப்பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் கும்பல், நாட்டு துப்பாக்கியால் இரண்டு மான்களை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.