தர்மபுரி அரசு மருத்துவமனையில் காட்சி பொருளானதண்ணீர் பைப்கள்

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 900 உள்நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் 250க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில், ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சிறிய பைப்புகள் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன் அருகில் சோப்புகளும் வைக்கப்பட்டது.

வெளியே இருந்து, அரசு மருத்துவமனைக்குள் வரும் பொதுமக்கள் சோப்பினால் கைகளை சுத்தம் செய்து, கைகளை தண்ணீர் பைப்பில் கழுவி சுத்தம் செய்த பின்னர் உள்ளே செல்வார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பைப்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்யாமல், அரசு மருத்துவமனைக்குள் செல்லும் நிலை உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பைப்பில் தண்ணீரும், சோப்பும் இல்லை. எனவே, மீண்டும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: