ஏலச்சீட்டில் ₹6 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் அதிமுக பிரமுகர் வீட்டின் முன் தர்ணா

உத்திரமேரூர், ஏப்.12: உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பாவோடு தோப்புத் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (39) கார் டிரைவர். அதிமுகவில் ஓட்டுநரணியில் பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையுள்ள சீட்டில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஏலச் சீட்டு எடுப்பவர்களிடம் கூடுதல் வட்டி தொகை தருவதாகக் கூறி ஏல தொகையினை  பாக்யராஜ் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் பாக்கியராஜ் ஏலச்சீட்டு பணத்தினை முழுமையாக எடுத்துக் கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் ஏலச் சீட்டில் பாதிக்கப்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவுகளில் புகார் அளித்தனர். மேலும் பெண்களிடம் தீபாவளி பண்டு சீட்டு போட்டுள்ளார். மேலும் பெண்களை ஏமாற்றி நகைகள் மற்றும் கூடுதல் வட்டி தருவதாக பல லட்சம் தொகை என சுமார் ரூ.6 கோடிக்கு மேல் ஏமாற்றியது தற்போது புற்றீசல் போல் வெளிவரத் துவங்கியது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 100ம் மேற்பட்டோர் தலைமறைவான பாக்கியராஜின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் மனு அளித்தனர்.

Related Stories: