விமான நிலையத்தில் பயணிகள் முற்றுகை

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 182 பயணிகள் செல்ல இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது தெரிந்தது. விமான பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறாமல் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாகியும் இயந்திர கோளாரை சீரமைக்கும் பணி முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்டரை சூழ்ந்து, முற்றுகையிட்டனர். அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து உணவு வழங்கினர். பின்னர், அனைவரையும் சொகுசு பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைத்தனர். பழுது சரிசெய்யப்பட்டு விமானம் இரவு புறப்பட்டு சென்றது.

Related Stories: