ஊட்டி,ஏப்.10: சீசன் முடியும் வரை ஊட்டியில் உள்ள அனைத்து ஏடிஎம்.,களிலும் கூடுதல் பணம் நிரப்ப வேண்டும் மற்றும் நாள் தோறும் பணத்தை நிரப்ப வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது.
வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இவர்கள் தங்களது தேவைகளுக்கு மற்றும் வழிச் செலவிற்கு தேவையான பணத்தை மட்டுமே எடுத்து வருகின்றனர். இங்கு வந்த பின்னரே இங்குள்ள ஏடிஎம்., மெஷின்களில் உணவு மற்றும் அறைகள் போன்றவைகளுக்காக பணத்ைத எடுக்கின்றனர். இதனால், தற்போது ஊட்டியில் உள்ள ஏடிஎம்., மெஷின்களில் போடும் பணம் உடனடியாக தீர்ந்து விடுகிறது.
உள்ளூர் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஏடிஎம்., மிஷிஜ்களில் பணம் எடுக்க சென்றால், ஏமாற்றத்துடனே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏடிஎம்., மையங்களிலும் எந்நேரமும் பணம் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஊட்டி நகரில் உள்ள அனைத்து ஏடிஎம்., மெஷின்களில் கூடுதலாக அல்லது நாள் தோறும் பணத்தை நிரப்பி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பணம் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.